18

siruppiddy

நவம்பர் 03, 2017

பஸ்களுக்குள் வைத்து யாழில் பெண்கள் மீது பாலியல் சித்திரவதை?

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து சேவையிலீடுபடும் பேருந்துகளே பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்த இடமாக காணப்படுவதாக பொதுமக்களால் குற்றம்
 சாட்டப்படுகின்றது.
வறிய மக்களுடன் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் மட்டுமல்லாது பாடசாலை மாணவர்களும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களும் நாளாந்தம் தமது தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தி வரும் போக்குவரத்து சாதனம்தான் இந்த தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள்.
நாளாந்தம் மக்கள் தத்தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்காக பயணிக்கும் இந்த பேருந்துகளில் அதன் கொள்ளளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்படுகின்றனர். அதனால் நாளாந்தம் பயணிகள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக பாடசாலைகளுக்கும் தனியார் வகுப்புகளுக்கும் மட்டுமல்லாது அரச மற்றும் தனியார் தொழில்களுக்கு செல்லும் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை நாளாந்தம் பல பிரச்சினைகளை குறித்த பேருந்து சேவைகளால் எதிர்கொண்டுவருகின்றனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் மட்டுமல்லாது அரச பேருந்துகளிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதை காணமுடிகின்றது. காலை வேளைகளில் தொழிலுக்கு பாடசாலை மற்றும் தெழிலகங்களுக்கு செல்லும்போதும்  மாலை நேரங்களில் வீடு திரும்பும்போதும் பேருந்துகளில் பயணிக்கும் பல பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாவதை 
காணமுடிகின்றது.

பேருந்துகளில் பாலியல் எண்ணத்துடன் பல ஆண்கள் பயணிப்பதனால் பெண்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் பேருந்துகளில் பகல் நேரங்களை விடவும் மாலை 5 மணிக்கு பின்னர் கூட்டம் அதிகம் என்பதால் இவ்வாறு நெருக்கடி நிலையை பயன்படுத்தி குறித்த கூட்டங்கள் பெண்களை தொல்லைகொடுத்து வருவதைக்
 காணமுடிகின்றது.
அலுவலகம், தொழிற்சாலை, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் மாலை வேளையிலேயே வீடு திரும்புகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேருந்துகளில் ஏறும் சில ஆண்கள் திட்டமிட்ட வகையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதுடன் அவற்றை படங்கள் எடுத்து அந்தப் படங்களைக் கொண்டு  குறித்த பெண்களை மிரட்டி  படுக்கையறைக்கு இழுப்பதான சம்பவங்களும் நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் விசனம் 
தெரிவித்துள்ளனர்.
அதைவிட பரிதாபமான விடயம் என்னவெனில் சில தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து நடத்துநர்கள் பெண் பயணிகளை குறிப்பாக திருமணமான பெண்களை அதிகளவில் சீண்டி தமக்கு ஏற்றவகையில் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டப்படுகின்றது. இதற்கு சான்றாக சட்டத்தின் முன் சென்ற சம்பவங்கள்
 பல உள்ளன.
இதைவிட தனியார் பேருந்து நடத்துநர்கள் பெண்களின் முதுகில் தடவுவதும் மார்பகங்களில் தட்டுவதுமான சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. இதை தட்டிக்கேட்டால் இது சகஜம் என்று சொல்லும் வாகன நடத்துநர்கள் அவ்வாறு ஒத்துப்போகாவிட்டால் இறங்குமாறும் சத்தமிடுகின்றார்கள் என பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை 
தெரிவித்துவருகின்றனர்.