18

siruppiddy

ஜூலை 15, 2014

சம்பந்தன் கடும் சீற்றம் ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது என்று !

வடக்கு முதலமைச்சரிடம் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஆளுனராக நியமித்துள்ள ஜனாதிபதியின் செயல், தான்தோன்றித்தனமான - கேவலமான- அசிங்கமான நடவடிக்கை என்று சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். " இது தொடர்பில் அவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
  
வடக்கு மாகாண ஆளுநராக சந்திரசிறியின் மீள் நியமனம், வடக்கு மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் எதிர்வரும் 19ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்த பின்னர் மறுநாள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ் அணியின் 34ஆவது மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளேன்.
"முன்னாள் இராணுவத் தளபதியான சந்திரசிறியை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மக்கள் சரித்திர வெற்றியடைய வைத்தனர்.
"இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாண சபை வந்த பின்னர் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் மாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் எனக் கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதியான ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக் காலம் முடிவடைந்ததும், அவருக்கு எதுவித பதவி நீடிப்பும் வழங்கப்படாது என்றும், சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முதலமைச்சரிடம் உறுதிமொழி வழங்கியிருந்தார். "ஆனால், வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜக்‌ஷ நியமித்துள்ளார்.
"ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால், மக்களின் இறைமையையும், மக்களின் பிரதிநிதிக்கு அளித்த வாக்குறுதியையும் ஜனாதிபதி அசிங்கப்படுத்தியுள்ளார். இவ்வாறான ஜனாதிபதியையும், அவரால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநரையும் இனிமேல் நாம் எப்படி மதிப்பது? "ஜனாதிபதியின் இந்தத் தான்தோன்றித்தனமான நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது. இதனைவிட வேறு எதனையும் நாம் கூற விரும்பவில்லை. அவ்வாறு கூறுவது எமக்கே வெட்கக்கேடானது'' என்று கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக