18

siruppiddy

ஆகஸ்ட் 19, 2013

சிங்கள பௌத்த தேசியவாதத்திற்குள் சிக்கியுள்ள


பாதுகாப்பான எதிர்காலத்தினை கூட்டாக கட்டியெழுப்ப அழைப்பு !! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிங்கள பௌத்த தேசியவாதத்திற்குள் சிக்கியுள்ள முஸ்லிம் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு !
இலங்கைத்தீவில் சிறீலங்காவின் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அராஜகத்தினை வன்மையாக கண்டிப்பதோடு சிங்கள பௌத்த தேசியவாத்திற்குள் சிக்கியுள்ள முஸ்லீம் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு தனது வலுவான ஆதரவினை தெரிவித்துக் கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை தமிழ்மொழியினை தாய்மொழியாக் கொண்ட சகோதரர்கள் என்ற வகையில் தமிழர் தாயகத்தில் தமது பாதுகாப்பான எதிர்காலத்தினை கட்டியெழுப்ப தமிழ்மக்களுடனும் அவர்களது போராட்டத்துடனும் இணையுமாறும் முஸ்லிம் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையோடு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கைத் தீவில் தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகத்தினை ஆக்கிரமித்துவைத்திருக்கும் சிங்கள பௌத்த தேசியவாத அரசு தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தினை தனது இராணுவ சர்வாதிகாரத்தின் வல்லாதிக்க கரங்கொண்டு அடக்கிவிடலாம் என நினைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தனது இன அழிப்பு காட்டுமிராண்டித்தனத்தினை முஸ்லீம் மக்களினை நோக்கியும் அவர்களது வழிபாட்டு உரிமையினையும் ஏனைய பண்பாட்டு உரிமைகளினைக் குறிவைத்தும் செயற்படத் தொடங்கியுள்ளது.
உலகின் 600 மில்லியன் மக்களின் வழிபாட்டிற்கும் மதிப்புக்கும் உரியபௌத்த மதத்தினை தங்களது அரசியல் அதிகாரத்திற்காக சிங்கள பெருந்தேசியவாதத்தினுள் சிறைப்படுத்தியுள்ள சிறீலங்காவின் இனவெறிஅரசு தமிழர்தாயகத்தினுள் காணப்படக்கூடிய தமிழ்பௌத்த புராதன சின்னங்களினை சிங்களபௌத்த சின்னங்களாக பிரகடனப்படுத்தி தமிழ்மக்கள் பௌத்தமதத்தின் மீது கடந்த காலங்களில் கொண்டிருந்த பெருமதிப்பினை களங்கப்படுத்துவதோடு அப்பிரதேசங்களில் சிங்களமக்களினைக் குடியேற்றுவதன் மூலம் தமிழர்தாயகத்தினை சிதைத்து கூறுபோடும் முயற்சியினை துரிதப்படுத்தியுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக தமிழ்மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியினை தற்போது முஸ்லீம் மக்களின் மீது திருப்பிவிட்டுள்ளது. முஸ்லீம் மக்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஆடையணியும் முறைமைகள் ஆகியவற்றில் தனது வன்முறையினை ஆரம்பித்த சிங்களபௌத்த தேசியவாதம் தற்போது அவர்களின் வழிபாட்டு தலங்களினை அழிப்பதிலும் வழிபாட்டு உரிமைகளினை மறுப்பதிலும் தனது சட்டரீதியானதும் சட்டத்திற்கு புறம்பானதுமான சகலசக்திகளினையும் ஈடுபடுத்தியுள்ளது.
பௌத்த மதத்தினை தேசிய மதமாக தனது அரசியலமைப்பில் பிரகடனப்படுத்தியுள்ள சிறீலங்கா ஏனைய மதங்களுக்கும் பண்பாடுகளுக்கும் உரியசமத்துவ உரிமைகளினை மறுத்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமையினை அபகரிப்பதில் சுவைகண்ட சிங்கள பௌத்த தேசியவாதம் அடுத்தகட்டத்தில் முஸ்லீம் மக்களின் இருப்பினை அழிப்பதற்கான திட்டங்களினை விரிவுபடுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே கடந்த நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் தலைநகரினை அண்டிய வெல்வெரி பிரதேசத்தில் கத்தோலிக்க சிங்களமக்கள் மீதுநிகழ்த்தப்பட்ட இராணுவ வன்முறையினையும் புரியமுடிகின்றது.
கூர்மையடைந்துள்ள சிங்கள பௌத்த தேசியவாதம் சிங்களவராயினும் கிறீஸ்தவ மதத்தவர்களினைக்கூட விட்டுவைக்கத் தயாரில்லை என்கின்ற அளவிற்கு மூர்க்கமடைந்துள்ளது.
இது மறுவகையில் மாற்றுப் பண்பாடுகளினையோ மற்றைய மதங்களினையோ ஏனைய மக்களின் தேசிய உரிமைகளினையோ ஏற்று அங்கீகரித்து இணைந்து வாழதயாரில்லை என்ற சிஙகள பௌத்த தேசியவாதிகளின் உறுதியான நிலையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
இத்தகைய நிலையில் நாடுகடந்ததமிழீழஅரசாங்கம் தனது சுதந்திரசாசனத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தினை மீண்டும் இங்கு நினைவூட்டவிரும்புகின்றது.
''தமிழீழஅரசு ஒரு மதசார்பற்ற அரசாக அமையும். அதன் கீழ் சகல மக்களினதும் மதவழிபாட்டு உரிமையும் தங்கள் மதக்கடமைகளினை நிறைவேற்றுவதில் அவர்களுக்குரிய பண்பாட்டு உரிமையும் தங்கு தடையின்றி உறுதிப்படுத்தப்படும்.'
இலங்கைத்தீவில் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் உருவாகவிருக்கும் சுதந்திர தமிழீழம் சகலவித மதங்களுக்கும் பண்பாடுகளுக்கும் சமஉரிமையும் மதிப்பும் அளிக்கும் ஒருதேசமாகும். சிங்கள பௌத்த தேசியவாதத்தினைப் போன்று சகல மாற்றுப்பண்பாடுகளினையும் இனங்களினையும் தனது பெருந்தேசியவாதத்தினுள் விழுங்கி அழிக்கின்ற குரோதமனப்பான்மையற்றதும் 'யாதும்ஊரேயாவரும் கேளீர்'என்ற முது பெரும் தமிழ்பண்பாட்டிற்கு அமைய வந்தார் அனைவரினையும் வாழவைக்கும் சுதந்திரபூமியாக தமிழீழத்தின் மண்ணும் அங்குஅமையும் மக்கள் ஆட்சியும் இருக்கும்.
அவ் விடுதலை நாளினை நோக்கி காத்திருக்கும் உலகெங்கும் சிதறியுள்ள தமிழீழமக்கள் அனைவரும் இன்று சிஙகள பௌத்த தேசியவாதத்தின் கொடியகரங்களுக்குள் சிக்கியுள்ள முஸ்லீம் மக்களின் போராட்டம் வெற்றிபெற தங்களது ஆதரவினை பெருமனதுடன் தெரிவித்துக்கொள்கின்ற அதேவேளையில் தமிழ்மொழியினை தாய்மொழியாக் கொண்டசகோதரர்கள் என்றவகையில் தமிழர் தாயகத்தில் தமது பாதுகாப்பான எதிர்காலத்தினை கட்டியெழுப்ப தமிழ்மக்களுடனும் அவர்களது போராட்டத்துடனும் இணையுமாறு வரவேற்கப்படுகின்றனர்.
இவ்வாறு தோழமையுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக